;
Athirady Tamil News

சிறுவர்களின் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை!!

0

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது மற்றும் பெருந்தோட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுவர்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அது போதைப்பொருள் என குறிப்பிடப்படாவிட்டாலும், சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடியது என பொலிஸ் அதிகாரியொருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் இ.தொ.கா தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.