;
Athirady Tamil News

உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை- அமெரிக்க டாக்டர்கள் சாதனை!!

0

பொதுவாக பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு பெண் கர்ப்பமானார். அவரது வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார். குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.

இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்தது. இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். ரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும். இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் ரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும். மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை ஆபரேஷன் மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர்.

அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் நடந்தது. மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை டாக்டர் குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்கள். அதனை அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அந்த குழந்தையின் ரத்த நாளம் சரி செய்யப்பட்டதால் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் முதல் முறையாக இந்த ஆபரேஷனை அமெரிக்க டாக்டர் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.