;
Athirady Tamil News

மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – டி.கே.சிவக்குமார்!!

0

கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்திப்பேன் என கூறினார். இதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தது. இந்நிலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் டி.கே.சிவக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களுக்கு தமிழ்நாடு மீது விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் நமது அண்ணன்-தம்பிகள். யார் மீதும் எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. மேகதாது எங்களுடைய திட்டம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏற்படும். கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து நிறுத்தி அதை காவிரி படுகையில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவோம். காவிரியில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசின் கையில் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு எப்போது எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். சண்டை போட்டது போதும். கர்நாடகத்தில் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தமிழக அரசுக்கு என்ன தொந்தரவு ஏற்படுகிறது? நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினர் ஆதங்கப்பட தேவை இல்லை. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது. நாம் சண்டை போட்டு கோர்ட்டுக்கு அலைந்து திரிந்தது போதும். நல்லிணக்கத்துடன் குடிநீர் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் இந்த மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.