;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று ( 01) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் Stability proof test சான்றிதழை கட்டாயம் பெற்றுக்கொள்வதுடன், படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்துவதுடன் தாழ்வுப்படகுகள் ஏணிப்படி வசதி அமைத்தலை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள் , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரை கைது செய்தல், கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல்,பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, கடற்போக்குவரத்து நேரத்திற்கமைய தரைப்போக்குவரத்தை ஏற்படுத்தல், வாகனத்தரிப்பிடம், படகுகளில் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல், தரை மற்றும் கடற்போக்குவரத்து நேரஅட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு , படகுகளில் மோட்டாா் வாகனங்களை ஏற்றும்போது பிரதேசசெயலரிடம் அனுமதி பெறல், யாசகம் பெறுவோர் உள்வருவதை தடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும் கடைகளுக்கு பிரதேச சபையின் அனுமதி, நடமாடும் வைத்திய சேவை ,சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர்,உதவி மாவட்டச் செயலாளர், நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் நாகபூசணி அம்மன் ஆலயம் வேலணை பிரதேச செயலாளர், வேலணை வலயக் கல்விப்பணிப்பாளர், மின்சாரசபை மின் அத்தியட்சகர், சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர், பிரதேசசபை , துறை சார் திணைக்கள தலைவர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.