;
Athirady Tamil News

பொன்னேரி அருகே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா!!

0

பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகர்- சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி (பொறியியல் பட்டதாரி). இவர்கள் கல்வி உள்ளிட்டவற்றிற்காக தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். அண்மையில் வெளியான குடிமை பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 229-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தங்களது கிராமத்தில் இருந்து முதன் முதலாக குடிமை பணிகள் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கோத்து கொடுத்தும் கிராம மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய சாதனை மாணவி அஸ்வினி பொறியியல் பட்டப்படிப்பை முடித்து தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்த ஊதியத்தில் பணியாற்றி வந்ததாகவும், ஐ.ஏ.எஸ். லட்சியத்திற்காக வேலையை உதறி தள்ளிவிட்டு தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு 4 முறை தோல்வியடைந்தாலும் விடா முயற்சியின் காரணமாக ஐந்தாவது முறை தேர்வெழுதி அகில இந்திய அளவில் 229-வது பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தன்னுடைய தரவரிசை பட்டியலுக்கு ஐ.பி.எஸ். ஒதுக்கீடு கிடைக்கும் எனவும், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன் என தெரிவித்தார். மேலும் குடிமை பணிகள் தேர்வு என்பது எளிதானதுதான் எனவும், தொடர் பயிற்சியும், விடா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஓரிரு முறை தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற்று சாதிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

தங்களது கிராமத்தில் இருந்து முதல் முறையாக குடிமை பணிகளில் தேர்ச்சி பெற்ற மாணவியை கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பானு பிரசாத்,செல்வகுமார்,கோளூர் கோதண்டன்,ஆமூர் செல்வமணி,ராஜ்குமார்,மாதவரம் ரமேஷ்பாபு, வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள்,கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.