;
Athirady Tamil News

பிரித்தானியாவில் சூறாவளியின் கோர தாண்டவம் ; மின்சாரம் இன்றி 55,000 வீடுகள் பாதிப்பு

0

பிரித்தானியாவின் கார்ன்வால் மற்றும் சிலி தீவுகளில் வீசிய கடும் சூறாவளி காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது அங்கு விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சூறாவளியின் தாக்கத்தினால் செயின்ட் இவ்ஸ் பகுதியில் உள்ள ஒரு விருந்தகத்துக்குச் செல்லும் பிரதான வீதியை மறித்து இராட்சத மரம் ஒன்று வீழ்ந்திருந்தது.

இதனால் அந்த விருந்தகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இரவு வீட்டிற்குச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகே மரம் வெட்டும் நிபுணர்களால் அந்த மரம் அகற்றப்பட்டது.

சூறாவளியின் உச்சக்கட்டத்தின் போது சுமார் 55,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது வரை பல்லாயிரக்கணக்கான வீடுகள் இன்னும் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ளன.

மின்சாரம் இல்லாத காரணத்தினால் பல ஊழியர்கள் அதிகாலையிலேயே பணிக்குத் திரும்பியுள்ளனர். கார்ன்வால் முழுவதும் பாதுகாப்புக் கருதி பல பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன, சில சேவைகள் நீண்ட தாமதத்துடன் இயங்கி வருகின்றன.

சூறாவளி இரவு நேரத்தில் தாக்கியதால் பெரும் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்று வீடுகளுக்குள்ளேயே இருந்ததும் பாதிப்புகள் குறைவதற்குக் காரணமாக அமைந்தது.

சூறாவளி தற்போது நகர்ந்து சென்றுவிட்ட போதிலும், அதன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள் கார்ன்வால் மக்களின் இயல்பு வாழ்க்கையை இன்னும் பாதித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.