;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1521129.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

பொய்யைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் திணறுகின்றன!!

0

கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர். தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் திணறுகின்றன.

எதிர்வரும் 3 வருடங்களை இலங்கை வரலாற்றில் மிகவும் முன்னேறிய காலகட்டமாக மாற்றுவோம் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கிராமத்திற்குச் சென்றால் அரசாங்கத்திற்கு எதிராக கூச்சல் போடுவர் என சிலர் சொல்கின்றனர். தற்பொழுத்து நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பொய் சொல்ல முடியாத அளவுக்கு அனாதரவாக உள்ளன. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்பி வருகிறோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் பாதுகாப்பை சிறந்த முறையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ், பர்கர் என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்த நாடு பாதுகாப்பற்ற நாடாக மாற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து இனத்தவர்களும் ஒன்றாக வாழும் வகையில் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம். அடுத்த 3 வருடங்களை இலங்கை வரலாற்றில் மிகவும் முன்னேறிய காலகட்டமாக மாற்றுவோம்.

இந்நாட்டின் முழு வீதி வலையமைப்பும் நவீனமயமாக்கப்படும். சுபீட்சத்தின் நோக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 100,000 கிலோமீற்றர் நீளமான வீதிகளை நிர்மாணிப்பதாக உறுதியளித்தார். கோவிட் தொற்றுநோய் காலத்திலும் நாங்கள் அதனை ஆரம்பித்தோம், இவை ஜனாதிபதியின் வாக்குறுதிகள். கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 800 வீதிகளை அமைத்து வருகின்றோம். கிராமங்களில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வீதிகளை அமைப்பதற்காக இம்மாவட்ட அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த நாட்டில் நவீன வீதி வலையமைப்பை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விரைவில் நகரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், பாடசாலை செல்லும் மாணவர்கள் விரைவில் பாடசாலைக்கு செல்ல வேண்டும். கடந்த காலங்களில் இந்த வீதிகளில் புழுதி மற்றும் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் பயணிக்க சிரமப்பட்டனர். விரைவாக நாடு முழுவதும் பயணிக்க உதவும் நவீன வீதி வலையமைப்பை உருவாக்குவதே எங்கள் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

எமது அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்ப முயற்சிக்கின்றன. அதுதான் எதிர்க்கட்சிகளின் அரசியல் போக்காகும். உலக வங்கி எங்களுக்கு உதவவில்லை என்று நினைக்கிறார்கள். வீதிகளை அமைக்க உலக வங்கி 500 மில்லியன் டாலர் அல்லது அரை பில்லியன் டாலர்களை வழங்கியது. மேலும் வீதிகள் அமைக்க சவுதி நிதி எங்களுக்கு பணம் வழங்கியுள்ளது.

முஸ்லிம்களுக்கும் எங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தமிழர்கள், கத்தோலிக்கர்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள் என பிரிவினையை ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளின் பணியாக உள்ளது. எமது அரசாங்கம் எதிர்க்கட்சிகளைப் போன்று மக்களை பிளவுபடுத்தும் அரசல்ல. எமது ஜனாதிபதியின் வருகையின் பின்னர் முழு நாட்டு மக்களும் பாதுகாக்கப்பட்டனர். இன்று முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கத்தோலிக்கர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பௌத்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மலாய், பர்கர்களும் ஒரு பிரச்சினையும் இல்லை. வங்குரோத்தானவர்கள்தான் இப்படிப் பிரிவினைகளைப் பேசுகிறார்கள்.

முஸ்லிம் நாடுகளுடனான எமது உறவு அவ்வாறாக உள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் வெளிநாட்டு உறவுகளை பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்தார். முஸ்லிம் நாடுகள் நமது நட்பு நாடுகள்.அவை நமது நண்பர்கள். அந்த உறவை தான் எதிர்க்கட்சிகள் உடைக்கப் பார்க்கின்றன. இந்த நாடுகளுடன் கோத்தபாய ராஜபக்ச மிகவும் நட்புறவைக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்காக இனங்களையும் மதங்களையும் பிரிக்கின்றன. அதைத்தான் பிரேமதாசவும் செய்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அந்த மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கான பெரும்பாலான அபிவிருத்திப் பணிகளைச் செய்தார். எனினும் பெரும்பாலான மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். இந்தப் பிரதேசங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? அவர்கள் உங்களுக்கு செய்த சேவை ஏதேனும் உண்டா? இப்பிரதேசங்களில் பெரும்பாலான வீதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.

இப்போது கோத்தபாய ராஜபக்ச பெரும்பாலான வீதிகளை அமைத்து வருகிறார். இந்த முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏதாவது செய்ததா என்று கூற முடியுமா . திருகோணமலைக்கோ அம்பாறைக்கோ எதுவும் செய்யப்படவில்லை. ஜனாதிபதி கோட்டாபய கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள், நாங்கள் வாக்களிக்காவிட்டாலும், குறைந்த சதவீதத்தையே பெற்றிருந்தாலும், இவர்கள் அனைவரையும் நேசிக்கின்றார். எனவே, அவர் முழு நாட்டிற்கும் சேவையாற்றுகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாலம் நிர்மாணிக்கப்படுகிறது. தேர்தலை எதிர்பார்த்தன்றி மக்களின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய நோக்கிலே செயற்படுகிறோம்.

ஏமாற வேண்டாம் என்று வடக்கு கிழக்கு மக்களிடம் கோருகிறோம். வெறுப்புடன் வாழ வேண்டாம் . ஐ.தே.க., பிரேமதாச, திஸாநாயக்க ஆகிய அனைவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உங்கள் வாக்குகளை மட்டுமே பெறுகிறார்கள். எமக்கு வாக்களிக்காவிட்டாலும் உங்களுக்காக சேவையாற்றுவோம் என்றார்.

7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதியின் பிபிலை முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.