ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்!
காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானின் சரக்கு கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
காஸ்பியன் கடல்பகுதியில் ஈரானின் ராணுவ சாதனங்களை ஏற்றி வந்த கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஈரான் அந்தத் தாக்குதல் தொடர்பாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதில், மாலுமி ஒருவர் காயமடைந்ததாகவும், மற்றொருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது.
இதன்மூலம், உக்ரைன் – ரஷியா போர் சர்வதேச மயமாகி வருவதாக உலக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஈரான் தனது அறிக்கையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் ஈரான் ஒருபோதும் தலையிட்டதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
சர்வதேசத் தடைகளுக்கு உள்பட்ட, ஈரானுக்கும் ரஷியாவுக்கும் இடையில் ராணுவப் பொருள்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைனின் உளவுத்துறையும் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் தூதரக அதிகாரிகளிடம் ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய காஜா கல்லாஸுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நா. பாதுகாப்பு சபையும் கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி கோரிக்கை வைத்துள்ளார்.