;
Athirady Tamil News

அட்டாரி – வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!

0

அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டுள்ளதினால் இரு நாடுகளிலும் சிக்கியுள்ள ஏராளமான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகிர்ந்து வந்த அட்டாரி – வாகா எல்லையை மூட நேற்று (ஏப்.24) இரு நாடுகளின் அரசுகளும் திடீரென உத்தரவிட்டதினால், எல்லையைக் கடக்க முடியாமல் ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர்.

இத்துடன், பாகிஸ்தானிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தப்பட்டதுடன், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதித்து மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. இதனால், தற்போது வரை இந்தியாவிலிருந்த 28-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களும், அந்நாட்டிலிருந்த 105-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் தங்களது தாயகங்களுக்கு திரும்பியுள்ளனர்.

சிக்கித் தவிக்கும் உறவுகள்…

இந்நிலையில், பல்வேறு காரணங்களினால் இந்தியா வரவிருந்த பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தான் செல்லவிருந்த இந்தியர்களும் எல்லையைக் கடக்க முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் என்பவரின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் தங்களது உறவினரின் திருமணத்திற்காக அட்டாரி – வாகா எல்லையின் வழியாக இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று அட்டாரி – வாகா எல்லைக்கு வந்தபோது எல்லை மூடப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். இதனால், லாகூர் நகரத்தில் இரவைக் கழித்துவிட்டு இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பவுள்ளதாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த ரமிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு தங்களது உறவினரின் திருமணத்திற்காகச் சென்றிருந்த நிலையில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதை அறிந்து நிகழ்ச்சி மற்றும் முக்கிய சடங்குகள் முடிவதற்குள் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இவர்களைப் போல், எல்லைகளைக் கடந்து இருநாடுகளிலும் உறவினர்களைக் கொண்டுள்ள ஏராளமான மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நிலவும் போர்ப் பதற்றத்தினால் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையில் எப்போதெல்லாம் பதற்றமான சூழல் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் மனித தொடர்புகள்தான் முதலில் பாதிக்கப்படுவதாகவும், அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டதன் மூலம் ஏராளமான குடும்பத்தினர் தங்களது உறவுகளைப் பிரியும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஆசிஃப் மெமூத் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.