மேல் மாகாணத்தில் தீவிரமடையும் டெங்கு!
முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகள் டெங்கு மற்றும் இன்புளுவன்சா இரண்டிற்கும் பொதுவாகவே இருக்கும். எனவே, காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ‘இரத்த அணுக்கள் பரிசோதனை’ (Full Blood Count) செய்துகொள்வது அவசியமாகும். குருதிச் சிறுதட்டுகளின் (Platelets) அளவை வைத்தே நோயின் தன்மையை மருத்துவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியும்.
டெங்கு நோயைப் பொறுத்தவரை, காய்ச்சல் தணியும் தருணமே மிகவும் ஆபத்தானது. காய்ச்சல் குறைந்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள்ளேயே உடலின் பாய்பொருள் கசிவு மற்றும் இரத்தப்போக்கு போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
கடுமையான வயிற்றுவலி அல்லது தொடர் வாந்தி, மூக்கு, பல் ஈறுகளில் இரத்தப்போக்கு அல்லது வாந்தி/மலத்தில் இரத்தம் வெளியேறுதல், அதிகப்படியான சோர்வு, மயக்கம் அல்லது தூக்கக் கலக்கம் சிறுநீர் வெளியேற்றம் குறைதல் மற்றும் உடல் குளிர்ச்சியடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடன் மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்.
டெங்கு ‘ஈடீஸ்’ (Aedes) வகை நுளம்புகளால் பரவுகிறது. இவை சுத்தமான தேங்கிய நீரிலும் முட்டையிடும். எனவே, வாரத்திற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கி வீட்டைச் சுற்றியுள்ள நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்.
பயன்பாடற்ற சிரட்டைகள், டயர்கள், தகரங்களை அகற்றுதல். நீர்த் தொட்டிகள் மற்றும் பீப்பாய்களை சரியாக மூடி வைத்தல். கூரை பீலிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் நீர்த்தட்டுகளைத் தவறாமல் சுத்தம் செய்தல். புகையடித்தல் பறக்கும் நுளம்புகளை மட்டுமே கட்டுப்படுத்தும்; நீரில் உள்ள குடம்பிகளை அழிக்காது. எனவே, சுற்றப்புறத்தைச் சுத்தமாக வைப்பதே டெங்குவைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழியாகும்.
நாட்டில் இதுவரை 82,838 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு தொற்றால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் 26,136க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மொத்தப் பாதிப்பில் 43,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் (சுமார் 52%) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. மாவட்ட ரீதியில் கம்பஹா (17,280+) மற்றும் கொழும்பு (16,213+) ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 175 சுகாதாரம் சார்ந்த பகுதிகள் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. காய்ச்சல் குறைந்தவுடன் நோய் குணமாகிவிட்டது என்று அலட்சியமாக இல்லாமல், உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது உயிரைக் காக்கும்.