;
Athirady Tamil News

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

0

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக நேற்று (செப். 10) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செப். 10) போராட்டக் குழுவிலிருந்து பிரதிநிதிகள் பலருடன் ராணுவம் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத்தொடர்ந்து, இடைக்கால அரசுக்கு யாரை தலைமையேற்கச் செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இணைய வழியாக ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 4,000 பேர் பங்கேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்போது, சுசீலா கார்கியின் பெயரை பெரும்பான்மையானோர் முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.

இத மாபெரும் போராட்டத்தை ஒருங்கிணைத்த ‘ஜென் ஸீ’ இயக்க தலைவராகக் கருதப்படும் காத்மாண்டு மேயர் பாலென் ஷாவை விட, சுசீலா கார்கிக்கு ஆதரவு பெருகியது. இதையடுத்து, அவரது தலைமையில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமையவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.