நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.
இந்த நிலையில், கலவரத்தின்போதுநேபாளத்தின் ராஜ்பிராஜ் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் ஏராளமானோர் அந்தச் சிறைச்சாலைக்கு தீவைத்து கொளுத்தி தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் நேபாள சிறைச்சாலைகளில் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேபாள ராணுவமும் காவல் துறையும் பலப்படுத்தியுள்ளது.