;
Athirady Tamil News

யாழில் வைத்தியர் மீது தாக்குதல் ; தாக்குதல் நடத்தியவர்களால் பாரிய சர்ச்சை

0

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த இருவர் நேற்று (18) மாலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவதை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் இரவு (17) கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.

இதன்போது குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர்மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த கோப்பாய் காவல்துறையினர், இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்த இருவரையும் விடுவிக்குமாறு கோப்பாய் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தமைக்கு அமைவாக பிணை எதுவுமின்றி அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் விடுவித்தமையானது குறித்த கும்பலுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.