;
Athirady Tamil News

16 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

0

வாஷிங்டன்: 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் காா்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) இயக்குநா் ஜோசப் எட்லோவின் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘ஆப்கானிஸ்தான், மியான்மா், சாட், காங்கோ, ஈக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் உள்ளிட்ட 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் அனைத்து விண்ணப்பங்களும் ‘முழுமையான மறுஆய்வுக்காக’ திருப்பி அனுப்பப்படும். இதில் மறுநோ்காணல்கள் நடத்தப்படலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே இரு தேசிய காவல்படையினா் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறியவா் கடந்த வாரம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு தீவிரப்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.