கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொருட்கள் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி – அரசாங்கத்தின் புதிய திட்டம்
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.
அநுராதபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆயுள் காப்புறுதி
அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்புறுதி நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும்.
அது மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது. இதற்கிடையில், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மறுசீரமைப்பு திட்டம்
கூட்டுறவு ஊழியர்களுக்குத் திருப்திகரமான சம்பளம் மற்றும் ஆயுள் காப்புறுதி உள்ளிட்ட வசதிகளை வழங்கி, இந்த கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கூட்டுறவு இயக்கத்தை ‘திசைகாட்டி’யின் பாரிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வருகிறோம்.
அதன் ஊடாக ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு ‘கோப் சிட்டி’யை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். அத்துடன் நகரப் பகுதிகளில் பாரிய கோப் சிட்டிகளைப் பராமரித்துச் செல்வதற்குத் தேவையான கடன் தொகையை, குறைந்த வட்டியின் கீழ் வழங்க நடவடிக்கை எடுப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.