சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை ; இன்று நாடு தழுவிய புறக்கணிப்பு
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்ட கூட்டம்
இது தொடர்பில் நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் பின்வரும் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.
நாட்டில் நிலவும் கொலைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல்.
இன்று (16) ஒரு நாள் அடையாளமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் சட்டத்தரணிகள் விலகி இருத்தல்.
இந்த மிலேச்சத்தனமான குற்றத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரைக் கேட்டுக்கொள்ளுதல்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூகமயப்படுத்துவது தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் அதிருப்தியை வெளியிடுதல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டன.
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.
இடவசதி பற்றாக்குறை காரணமாகப் பல சட்டத்தரணிகள் Zoom தொழில்நுட்பம் ஊடாக இணைந்துகொண்டதாக ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் சட்டத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.