தம்பதிக்கு இடையே மோதல் – தலையிட்டவரால் அடித்து கொலை செய்யப்பட்ட கணவர் – மனைவி படுகாயம்
தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது.
இதன் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலில் ஒரே வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தம்பதியினருக்கு இடையே மோதல்
அதன் பின்னர் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த நபர் இந்த மோதலில் தலையிட்டுள்ளார்.
தலையிட்ட நபர் தடியால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய தடியைத் தனது வீட்டின் கூரை மீது வீசியிருந்தது கண்டறியப்பட்டது. பொலிஸாரால் அந்தத் தடி மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்து, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வசித்து வந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சுனில் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.