;
Athirady Tamil News

எல்நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் – பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

0

வரப்போகும் எல்நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், விவசாய பயன்பாட்டிற்கான நீரையும் குடிநீரையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் நீர் முகாமத்துவப் பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் கூறுகையில், நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்பு தற்போது சுமார் 48 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்கள்
தற்போதுள்ள நீரானது தற்போதைய யால பயிர்ச்செய்கை பருவத்திற்குப் போதுமானதாக இருக்கும். எனினும், வறட்சியான காலநிலை நீடித்து, வரவிருக்கும் பெரும்போக பயிர்ச் செய்கை பருவத்தைப் பாதித்தால், முன்னுரிமை அடிப்படையில் தண்ணீரை விநியோகிப்பதற்காக விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்களை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதன்படி, வறண்ட வலயத்தில் உள்ள பாரம்பரிய எல்லங்கா குளக் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உபரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதற்கான வடமத்திய மாகாண கால்வாய் திட்டப் பணிகள் தொடர்கின்றன. நீர் வீணாவதைத் தடுக்க நீர்ப்பாசனக் கால்வாய்களுக்கான தானியங்கி கதவுக் கட்டமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை உடனுக்குடன் கண்காணிக்கும் சென்சார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம்
களனி, களு, ஜின், நில்வளவை மற்றும் மல்வத்து உள்ளிட்ட முக்கிய ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண மட்டத்திலேயே காணப்படுகிறது. உடனடி வெள்ளப் பெருக்கு அபாயம் எதுவும் இல்லை. எனினும், வறண்ட காலநிலை தொடர்ந்தால் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடையக்கூடும்.

விவசாயப் பணிகளை மிகவும் அவதானமாகத் திட்டமிடுமாறும், குறைந்த அளவு நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ஏற்கனவே எச்சரிக்கையான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கி, பொறுப்புடன் தண்ணீரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.