;
Athirady Tamil News

இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல்… ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி

0

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், Hormuz நீரிணை ஊடாக இனி கப்பல்களை அனுமதிப்பதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

ஏற்றுமதி நிறுத்தம்
ஈரானின் இந்த அதிரடி முடிவால் தற்போது பல எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் விமானப் படை வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடும் இராணுவ நடவடிக்கையை ஈரான் மீது சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தது. பதிலடியாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

வெளிவரும் தகவலின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 200 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், Hormuz நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. வெளியான செயற்கைக்கோள் படங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைரா போன்ற பெரிய துறைமுகங்களுக்கு அருகில் கப்பல்கள் குவிந்து கிடப்பதையும், ஹார்முஸ் நீரிணை வழியாக நகராமல் இருப்பதையும் காண முடிகிறது.

பாதுகாப்பு உத்தரவாதம்
மேலும், ஈரானின் IRGC படைகளிடம் இருந்து பல எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரானின் உத்தரவுகள் சட்டப்பூர்வமல்லை என்று கூறிய பிரித்தானியாவின் ரோயல் கடற்படை, கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தியது.

ஆனால், அமெரிக்க கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கையில், வளைகுடா முழுவதும், ஓமன் வளைகுடா, வடக்கு அரேபிய கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகியவற்றில் தற்போதைய சூழலில் கப்பல் போக்குவரத்து என்பது சிக்கலான விடயம் என்றும், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

கிரேக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கப்பல்கள் அரேபிய வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், குவைத் மற்றும் ஈரான் போன்ற உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் உலகளாவிய எண்ணெயில் சுமார் 20 சதவீதமும் கத்தாரில் இருந்து அதிக அளவு இயற்கை எரிவாயும் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே முன்னெடுக்கப்படுகிறது.

தற்போது 14 திரவமாக்கப்பட்ட எரிவாயு கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல், திரும்பச் செல்வதா அல்லது அந்த நீரிணையில் இருந்து விலகி காத்திருப்பதா என்பதில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. கப்பல்களின் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.