;
Athirady Tamil News

அமெரிக்காவுக்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் கண்டனம்!

0

பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 8 அன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டுவீழ்த்தின.

இதனைத் தொடர்ந்து, ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், மோதல்கள் துவங்கிய 2 ஆவது நாளான இன்று (ஜூன் 11) பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானிய படைகள் பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் நாடுகளின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகக் குற்றஞ்சாட்டிய கத்தார் அரசு இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

”பிராந்தியத்தின் மீதான சட்டவிரோத தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் மோதலைக் கைவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் அரசுகள் தங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கத்தார் அரசு முழு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.