;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்

0

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரான் – வாஷிங்டன் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையைக் குறைப்பதையும், ராணுவ திட்டங்களை செயல்படுத்துவதையுமே அமெரிக்க அதிபரின் கருத்து நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக ஈரான் – அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவு மற்றும் அதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மை காரணமாக ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தாக்குதல் பல்வேறு வகையில் நடத்தி வருகின்றன. இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்ளிட்ட ராணுட மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பலியாகினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்தது. இதனால் பிரிட்டனின் உதவியுடன் அந்நாட்டு ராணுவத்துக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அரபிக் கடலில் அமெரிக்கா நிலை நிறுத்தியது.

இதனிடையே நேற்று அமெரிக்காவுக்குச் சொந்தமான எப்-15 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனை ஈரான் வெளிப்படையாக விடியோ வெளியிட்டு அறிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.