யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திலே இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கோள் மண்டல காட்சி தொகுப்பானது வடக்கு மாகாணத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் குறிப்பாக கல்வித் துறைக்கும் ஒரு சிறந்த மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், கோள் மண்டலம் நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வசதிகளோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான கோள்மண்டலம் சூரியன், நட்சத்திரங்கள் போன்ற விடயங்கள் காட்சியளிப்பது யதார்த்த பூர்வமாக விண்வெளியில் இருக்கத்தக்க வகையிலான உணர்வையும் பிரம்மிக்கத்தக்க வகையிலே நேரடியாக பிள்ளைகள் அறிவியல் சார்ந்த விடயங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதான வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்
மேலும், இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள கூடியதாகவும் தெரிவித்தார்.
குறித்த மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் காட்சிக்கூடமானது எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை மாலை 05.00 மணி தொடக்கம் மாலை 06.30 மணிவரையும், இரவு 07.00 மணி தொடக்கம் இரவு 08.30 மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண கல்வி அமைச்சின் அனுமதி பெற்று இது நடைபெறுவதனால் மாணவர்கள் பாடசாலை ஊடாக முற்பதிவு செய்து வழங்கப்படும் நேரத்தில் இதனை பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களை 077 7826217 அல்லது
076 1089005 தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.