ஸ்பெயினில் வெப்ப அலை பரவல்; 1,028 பேர் பலியான சோகம்
மாட்ரிட்
ஸ்பெயினில் வெப்ப அலை பரவலால் 1,028 பேர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.
பருவநிலை மாற்றம்
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில், ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலை பாதிப்புகளால் மருத்துவ பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் பலர் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பருவநிலை மாற்றம், தொழிற்சாலை கழிவுகள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதுபற்றி பருவநிலை மாநாடுகளில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் அதில் பெரிய பலன் ஏற்படவில்லை.
வெப்ப அலை
இதில், வெப்ப அலையால் ஸ்பெயினில் கடந்த ஜூனில் 1,028 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 407 ஆக இருந்தது. அதுவே, ஜூனில் அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.
இந்த சூழலில், அதனை விட நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் பலி எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது. ஸ்பெயின் வரலாற்றிலேயே 2015-ம் ஆண்டுக்கு பின்னர், ஜூன் மாதத்தில் இவ்வளவு அதிக உயிரிழப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
இரவு நேர வெப்பநிலை
ஸ்பெயின் மட்டுமின்றி, ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு, சுலோவாகியா மற்றும் அங்கேரி ஆகிய நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்து உள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் ஜூன் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. பிரான்சில் சராசரி வெப்பநிலை விட கூடுதலாகவும், இரவு நேர வெப்பநிலை இதுவரை இல்லாத வகையில் நாட்டிலேயே அதிக அளவாகவும் பதிவாகி உள்ளது.