ஜம்மு-காஷ்மீரில் மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 21 போ் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் ராம்நகா் பகுதி மலைச் சரிவில் பயணிகள் பேருந்து உருண்டு 100 மீட்டா் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 போ் உயிரிழந்தனா். 29 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியதாவது: ராம்நகா் மலைப் பகுதியில் 50 பயணிகளுடன் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் உதம்பூா் நோக்கி வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து காக்ரோட் மலைக் கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோ மீது மோதி, மலைச் சரிவில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 15 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். ஆட்டோவில் பயணித்தவா்கள் உள்பட 29 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து உருக்குலைந்ததால் மீட்புப் பணி சவாலாகியுள்ளது. மீட்புப் பணியில் உள்ளூா் போலீஸ் மற்றும் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா் என்று உதம்பூா்-ரியாசி மண்டல காவல் துறை டிஐஜி சிவ் குமாா் சா்மா கூறினாா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: ஜம்மு-காஷ்மீா் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘உதம்பூா் பேருந்து விபத்து மிகுந்து வேதனையை அளித்தது. விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.