கச்சதீவுப் பெருந்திருவிழாவின் போது களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் ஊழியர்களைப் பாராட்டி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மெச்சுரை வழங்கி கௌரவித்தார்.
இந்த விசேட நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன்,
கச்சதீவுப் பெருந்திருவிழாவின் வெற்றிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் செயற்பாடும் வகிபாகமும் மிக முக்கியமானதாகும். ஆயினும், களத்தில் நின்று கடுமையாக உழைக்கும் தமக்கான உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றதொரு ஆதங்கம் இந்த ஊழியர்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்தது.
அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்து, அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலேயே இன்றைய தினம் இந்த மெச்சுரை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,
‘அடிப்படை வசதிகள் வரையறுக்கப்பட்ட கச்சதீவில் தங்கி நின்று, களத்திலிருந்து தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை முன்னெடுப்பது எவ்வளவு சவாலானது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவ்வாறான கடினமான சூழலிலும் எவ்விதத் தொய்வுமின்றி மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இந்த ஊழியர்களை கௌரவிப்பதும், அவர்களுக்கான மரியாதையை வழங்குவதும் மிக முக்கியமானதாகும் என ஆளுநர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கச்சதீவு திருவிழாவின் போது கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையைச் சேர்ந்த 14 ஊழியர்களுக்கு ஆளுநரால் உத்தியோகபூர்வமாக மெச்சுரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த ஊழியர்களுடன் இணைந்து களத்தில் நேரடியாகப் பணியாற்றி வழிகாட்டிய சபையின் உப தவிசாளருக்கும் ஆளுநர் விசேட மதிப்பளித்துக் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஆளுநர் செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.