அக்கரைப்பற்று பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை! – 7 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
#பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் புதன்கிழமை (29) இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஒத்துழைப்புடன் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ரீ.ஜாரியா தலைமையில், குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரின் பங்கேற்புடன் அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் இந்த சுற்றிவளைப்பில் இணைந்திருந்தனர்.
இதன்போது ‘டேஸ்ட்’ கடைகள் உள்ளிட்ட 28 உணவகங்கள் சோதனை செய்யப்பட்டன. உணவகங்களின் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார சீர்கேடான முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இதேவேளை, சுகாதார விதிகளை மிகவும் மோசமான முறையில் மீறிய 07 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
