;
Athirady Tamil News

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

0

உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் நோவோரோசிஸ்க் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அஸ்ட்ரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஷெஷ்கார் எண்ணெய் கிடங்கின் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் எண்ணெய் கிடங்கு புகை மண்டலமாகக் காணப்படுகின்றது. ஆனால், இந்தத் தாக்குதல் பற்றி உக்ரைன் தற்போது வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ரஷியாவின் 4 ஆண்டுகால தாக்குதல்களை முறியடிக்க, உள்நாட்டில் உக்ரைன் உருவாக்கிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது நீண்டதூர தாக்குதல் திறனை உக்ரைன் மேம்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் தங்கும் விடுதி மீது நேற்று முன்தினம் (மே 22) அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் பலியானதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த ரஷிய அதிபர் புதின், இதனைக் போர்க் குற்றம் என்று குறிப்பிட்டு, விடுதியின் அருகில் எந்த ராணுவத் தளங்களும் இல்லாத நிலையிலும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், உக்ரைன் தூதர் மெல்னிக் ஆண்ட்ரி, ரஷிய அதிகாரிகள் முன்வைத்த போர்க்குற்றங்கள் தொடர்பானக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்தார். அவை ரஷியாவின் நாடகம் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் ரஷிய போர் தளங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.