பொலன்னறுவை வைத்தியசாலையில் சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
பொலன்னறுவை வைத்தியசாலையில் முதலாவது சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சீனா-இலங்கை நட்புணர்வு சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டின் சிறுவர் வைத்தியசாலையொன்றுக்கு வெளியிலுள்ள பிறிதொரு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.
15 வயதுடைய நோயாளிக்கு தந்தை தானமாக சிறுநீரகம்
வைத்தியசாலையின் தகவல்படி, மே 7ஆம் திகதி 15 வயதுடைய நோயாளி ஒருவருக்கு அவரது தந்தையினால் தானமாக வழங்கப்பட்ட சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
பிள்ளையும் தந்தையும் தற்போது நலமுடன் குணமடைந்து வருவதோடு, சாதகமான முன்னேற்றத்தைக் காட்டி வருவதாகப் பதிவாகியுள்ளது.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையானது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்றும், எதிர்கால தேசியத் தேவைகளுக்கு ஏற்ப சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு வைத்தியசாலை தயாராக உள்ளதை இது காட்டுகின்றது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தில்கா சரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வெளிநாட்டு சிகிச்சைகளுடன் தொடர்புடைய அதிகளவிலான நிதிப் பளு பெரும்பாலான இலங்கை குடும்பங்களுக்கு பிரதான சவாலாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சாதனை இலங்கைக்குள் சிறுவர்களுக்கான விசேட சிறுநீரக பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும், நோயாளிகள் வெளிநாடுகளில் விலையுயர்ந்த சிகிச்சைகளைப் பெற வேண்டிய தேவையைக் குறைக்கும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த மேலதிக விபரங்களை வழங்குவதற்கும், வைத்தியசாலையின் எதிர்கால அறுவை சிகிச்சை திட்டங்களை விளக்குவதற்கும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, பொலன்னறுவை சீனா-இலங்கை நட்புணர்வு சிறுநீரக வைத்தியசாலையுடன் இணைந்து நாளை (26) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.
இந்தத் தெளிவுபடுத்தல் நிகழ்வில் விசேட வைத்திய நிபுணர் தில்கா சரணசிங்க, சிறுவர் சிறுநீரக விசேட வைத்திய நிபுணர் வேனுஜய பண்டார, வாஸ்குலர் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மனுஜய கொடகந்தகே மற்றும் மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணர் ஜீவக குலதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.