பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்காதது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் பேருந்து சேவைகளைத் தொடர்வது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (02) காலை அனைத்து பேருந்து சங்கப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி, டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து பேருந்துத் தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்றும், தற்போதைய சூழ்நிலையில் தொழிலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என பேருந்து உரிமையாளர்கள் பலரும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், சங்கத்தின் தலைமையுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் பின்னர் இன்றைய தினமே இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என கெமுனு விஜேரத்ன மேலும் கூறினார்.