தீவிர வலதுசாரிகளால் வெடித்த கலவரம்… அமைதி காக்குமாறு வலியுறுத்திய ஸ்டார்மர்
மாணவர் ஒருவரின் மரணம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரித்தானியர்கள் மீது இனவெறி சார்ந்த வெறுப்பைத் தூண்டிவிடக் கூடும் என்பதால் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிவினையை உருவாக்க
பொதுமக்கள் ஈவிரக்கமின்றி பதிலளிக்க வேண்டும் என்று நைஜல் ஃபாரேஜ் அறைகூவல் விடுத்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஸ்டார்மர் ‘ரிஃபார்ம் UK’ தலைவரைக் கண்டித்துள்ளார்.
அத்துடன், இவ்வழக்கை குறிப்பிட்ட சமூகங்களைக் குறிவைக்கப் பயன்படுத்தக் கூடாது என்று ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினர் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினையை உருவாக்க முயற்சிப்பதற்காக நைஜல் ஃபாரேஜ் இந்த விவகாரத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.
2025 டிசம்பரில் சவுத்தாம்ப்டனில், 18 வயதான பல்கலைக்கழக மாணவரான ஹென்றி நோவாக், 23 வயதான விக்ரம் திக்வாவால் சீக்கியக் கத்தியைப் பயன்படுத்தி குத்திக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தின்போது நோவாக் தன்னை இனரீதியாகத் திட்டியதாகவும் தாக்கியதாகவும் திக்வா பொய்யாகக் கூறியுள்ளார். ஹாம்ப்ஷயர் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட காணொளியில், தனக்குக் கத்திக்குத்து விழுந்ததாகக் காவல்துறை அதிகாரிகளிடம் நோவாக் தொடர்ச்சியாக கூறியபோதிலும், அவருக்குக் கைவிலங்கு இடப்பட்டது பதிவாகியிருந்தது.
ஒருகட்டத்தில், கத்தியால் தாக்கப்பட்டதாக தாம் கருதவில்லை என ஒரு அதிகாரி கூறுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது. எலோன் மஸ்க் உள்ளிட்ட அமெரிக்காவின் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால், நோவாக்கை காவல்துறை நடத்திய விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்ற வேண்டும்
செவ்வாய்க்கிழமை மாலை, ஹென்றி நோவாக்கிற்கு நீதி கோரி மக்கள் ஒன்று கூடுமாறு தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சவுத்தாம்ப்டன் காவல் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
ஸ்டீபன் யாக்ஸ்லி-லென்னன் என்ற இயற்பெயர் கொண்ட ராபின்சன், ஹாம்ப்ஷயர் காவல்துறை மீது அமைப்பு ரீதியான இனவெறியைக் குற்றம் சாட்டியதுடன், திக்வாவின் குடும்பத்தை சவுத்தாம்ப்டனில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேலும், ஹென்றி வெள்ளையராக இருந்திருக்காவிட்டால், அவர் மீது எவரும் விலங்கிட வாய்ப்பில்லை என்றார். இந்த நிலையில், நோவாக்கின் கடைசித் தருணங்களைக் காட்டும் காட்சிகளை, தான் மிகவும் வேதனைக்குரியதாகக் கருதியதாக ஸ்டார்மர் கூறியுள்ளார். இந்த வழக்கில் இன உணர்வுகள் ஏதேனும் பங்கு வகித்தனவா என்பதை ஐஓபிசி ஆராய வேண்டும் என்றும் ஸ்டார்மர் கூறியுள்ளார்.