;
Athirady Tamil News

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை   வரவேற்கின்றோம்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

0

video link-

https://fromsmash.com/um0PysvQUr-dt

பாறுக் ஷிஹான்

எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை  மாவட்ட இலங்கை தமிழரசு  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன்   இரவு   கல்முனை பகுதியில்   விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

அம்பாறை மாவட்டம் மூன்று இனங்கள் வாழும் சமூகமாக இருக்கின்றோம்.இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இரு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றோம்.இலங்கை தமிழரசுக் கட்சியானது சிறுபான்மை இன விடுதலைக்காக நீண்ட காலம் பயணித்த ஒரு கட்சியாகும்.இதே வேளை கல்முனை பிரதேசம் சம்பந்தமாக இங்கு கூற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.கல்முனை பிரதேசம் என்பது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகவும்  தமிழ் மக்கள் சிறுபான்மையாகவும் வாழுகின்ற இடமாகும்.ஆனால் 1989 ஆண்டு முதல்  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் யாவரும் அறிவீர்கள்.இப்பிரதேச செயலகம் குறித்து எமது தமிழ் தேசிய தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த முயற்சி எமக்கு கை கூடாத  சூழ்நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி இருந்தோம்.அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக எமது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.இன்று இம்மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.அவரது அக்கருத்துக்களை பார்க்கின்றபோது இனவாதமாக கூறிவிட்டு அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.உண்மையில் நாங்கள் அதை மறுக்கின்றோம்.

நிச்சயமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.அவர்களும் ஒரு நிர்வாக கட்டமைப்பினுள் சகல உரிமைகளையும் சகல சலுகைகளையும் பெற்று வாழ வேண்டும் என விரும்புகின்றார்கள்.அண்மைக்காலத்தில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தற்போது நீதிமன்ற தீர்ப்பின் படி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த மக்களும் சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.அதே போன்று தான் இப்பிரதேச செயலகத்திற்கும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.அண்மைக்காலங்களில் இச்செயலகத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அத்துமீறல்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவீர்கள்.

சில அரசியல்வாதிகள் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களுக்காக நீதிமன்றத்தை நாங்கள் தற்போது நாடி இருக்கின்றோம்.அந்த நீதிமன்ற தீர்ப்பு கூட எவ்வாறு அமையப்போகின்றது என தெரியவில்லை.அதே போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பல கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததாக அறிகின்றோம்.அதன் அடிப்படையில் இவ்விடயத்தில் எமது நியாயபூர்வமான உரிமைகளை முன்வைத்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கங்களுடன் பேரம் பேசி சில விடயங்களை சாதித்திருக்கின்றார்கள்.நாங்கள் தொடர்ச்சியாக கொள்கையுடன் பயணித்ததன் காரணமாக எமது மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள்.

அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்காகவே நீதிமன்றத்தை நாங்கள் நாடி இருக்கின்றோம்.நாங்கள் நீதிமன்ற தீரப்பினை நம்பி இருக்கின்றோம்.அதன் அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம்.அத்துடன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.