பசுபிக் பெருங்கடலில் அணுசக்தி நீா்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை சோதனை
பசுபிக் பெருங்கடலில் தனது அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
பாதுகாப்பு வல்லுநா்களின் கூற்றுப்படி, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை 8,000 கி.மீ.-க்கும் அதிக தூரம் பாயும் திறன் கொண்ட ‘ஜேஎல்-3’ ரகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த 1982-க்குப் பிறகு நீா்மூழ்கிக் கப்பல் மூலம் சீன ராணுவம் நடத்தும் முதல் ஏவுகணைச் சோதனை இதுவாகும். மேலும், அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து சீனா ஏவுகணையை ஏவுவதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இது எங்களின் வருடாந்திர வழக்கமான பயிற்சி என்றும், சா்வதேச சட்டங்களின்படியே இது நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், சீனாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் கூறுகையில், ‘சீனாவின் இந்நடவடிக்கை பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சீா்குலைக்கும் வகையில் உள்ளது; வெளிப்படைத்தன்மை இல்லாத சீனாவின் அதிவேக இராணுவக் கட்டமைப்பு கவலையளிக்கிறது’ என்றாா்.
இதேபோல், ‘சீனாவின் நடவடிக்கை தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது’ என ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.