;
Athirady Tamil News

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப் பேச்சு

0

வாஷிங்டன்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அணு ஆயுத போராக மாற இருந்தது. அதனை நான் தடுத்து நிறுத்தினேன். எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தியுள்ளேன். அதனால், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்றார்.

11 விமானங்கள்

இந்த மோதலின்போது, 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் கூறினார். எனினும், அதுதொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை. விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பா? அல்லது ஒட்டுமொத்த அளவில் ஏற்பட்ட இழப்பா? என்பது பற்றிய விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

ஆனால், இரு நாடுகளின் போர் நிறுத்தத்தில் 3-ம் நாட்டின் தலையீடு இல்லை என இந்தியா அப்போதும், இப்போதும் தொடர்ந்து கூறி வருகிறது. இரு நாடுகளின் ராணுவ தளபதிகள் மட்டத்திலான உயர்நிலை பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று இந்தியா வலியுறுத்தி கூறி வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எப்-16 ஜெட் விமானங்கள் உள்பட 6 பாகிஸ்தானிய ராணுவ விமானங்கள் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்தோ விட்டன என இந்தியா கூறுகிறது.

ஆனால் டிரம்ப் கூறும்போது, 3 முதல் 5 கோடி மக்களின் உயிரை காப்பாற்றி விட்டீர்கள் என்று பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை பாராட்டினார் என்றும் டிரம்ப் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தி விட்டேன் என டிரம்ப் பலமுறை இதுபோன்று கூறியுள்ளார். தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், இதனை இந்தியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.