;
Athirady Tamil News

கதிர்காம பாதயாத்திரை-இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு

0

கதிர்காம பாதயாத்திரை- பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை- இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு

ஜூலை 24 ஆம் திகதி வரை பயணிக்க அனுமதி- இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாறுக் ஷிஹான்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை வழியூடான காட்டுப் பாதை இன்று வெள்ளிக்கிழமை (10) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியூடாகக் கதிர்காமத்தை நோக்கிப் பயணிக்கும் இந்த விசேட காட்டுப் பாதை, இன்று முதல் வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்திருக்கும் எனத் தொல்பொருள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

காடுகளின் இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்கும் பொருட்டு, காட்டுப் பாதையூடாகப் பயணிக்கும் பக்தர்கள் எவரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசி எறியக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காட்டுப் பாதையூடாகப் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் குடிநீர், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட பாதுகாப்புப் படையினரும், சுகாதாரத் துறையினரும், சிவில் அமைப்புகளும் இணைந்து விசேட சாவடிகளை அமைத்துள்ளனர்.

பாரம்பரியமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மாதக்கணக்கில் கால்நடையாகப் பயணித்து உகந்தையை வந்தடைந்துள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள், இன்று காலை காட்டுப் பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரோகரா கோஷங்களுடன் வனப்பகுதிக்குள் தமது புனிதப் பயணத்தைத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

    

You might also like

Leave A Reply

Your email address will not be published.