பாங்காக் மதுக்கூடத்தில் தீ விபத்து! 27 பேர் பலி!
பாங்காக்கில் உள்ள மதுக்கூடத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் வடக்குப் பகுதியில் இயங்கும் மதுக்கூடம் ஒன்றில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 27 பேர் பலியானதாகவும், 63 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 22 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
இந்த விபத்தில் 27 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. முதல்கட்டத் தகவலின்படி, தீ விபத்து ஏற்படுவதற்கு முன் மேடைக்கு அருகிலிருந்த சர்க்யூட்டில் இருந்து புகை வெளியேறுவதை சிலர் கண்டுள்ளனர். பின்னர் வெடி சப்தம் கேட்டதாகவும், உடனடியாக அடர்த்தியான புகை மூட்டம் நிலவியதாகவும் நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் பலரது சடலம் மதுபானக் கூடத்தின் பின்புறமுள்ள கழிப்பறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விபத்து பகுதிக்கு வரும் உறவினர்களுக்கு உதவ அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2022-ஆம் ஆண்டில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மதுக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர்.
அதற்கு முன்னதாக, 2009-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் பலியாகினர்.