அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும், பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு, இத்தருணத்திலிருந்து மேற்படி பகுதிகளில் எந்தவிதமான குப்பைகளையோ அல்லது கழிவுப்பொருட்களையோ கொட்டுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக பிரதேச சபை அறிவித்துள்ளது.பொதுமக்கள் தங்களது வீட்டு மற்றும் சிறிய அளவிலான கழிவுப்பொருட்களை, பொது சந்தை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தினசரி கழிவகற்றல் (Garbage Collection) பெட்டியில் மட்டும் கொட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டுபவர்களை உடனடியாக இனங்காணும் நோக்கில், குறித்த பகுதிகளில் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு, தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”இந்த உத்தரவையும் மீறி, பொது இடங்களில் குப்பைகள் அல்லது கழிவுப்பொருட்களைக் கொட்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
