;
Athirady Tamil News

தனியார் பேருந்தில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி

0

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியின் தொடங்கொட – லுணுகலப்புவ சந்தியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக திக்வெல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த, லுணுகலப்புவ பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இன்று (21) காலை சிறுமி தனது தாய் மற்றும் முன்பள்ளிக்குச் செல்லும் சகோதரனுடன் திக்வெல்ல நகரத்துக்கு செல்வதற்காக மாத்தறை – மித்தெனிய பேருந்தில் ஏறச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் தெரிவிக்கையில், தானும் தனது மகனும் முதலில் பேருந்தில் ஏறியதாகவும், சிறுமி பேருந்தில் ஏறும் போதே பேருந்து முன்னோக்கிச் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நேர்ந்தவுடனேயே பேருந்தின் சாரதி பேருந்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் திக்வெல்ல திடீர் மரண விசாரணை அதிகாரி ஜயந்த சமரசிங்க வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், உடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக திக்வெல்ல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.