;
Athirady Tamil News

சிறுமிக்கு பாலியல் அநீதி: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சதீஷ்தரன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

0
16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சதீஷ்தரன் நேற்று (24.07.2026) தீர்ப்பளித்துள்ளார்.
எதிரி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், அச்சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது. மேலும், சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிய எதிரி, தற்போது பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுவதால், அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், இது குறித்து பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டது.
இவ்வழக்கில் அரச தரப்பில் ஆஜரான அரச சட்டவாதி கா.நசிகேதன் மற்றும் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆகியோர், அனைத்துச் சாட்சியங்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தி, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இவ்வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து எதிரிக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமையும் என்பதோடு, எதிரி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது. சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் வகையில் இத்தகைய நீதியான, துணிச்சலான மற்றும் கடுமையான தீர்ப்பை வழங்கிய நீதிபதி சதீஷ்தரன் அவர்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை பெரிதும் போற்றத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.