நேபாள வெள்ளப் பேரழிவு! இந்தியா, சீனாவிடம் தற்காலிகப் பாலம் கோரும் அரசு!
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட முக்கிய சாலை இணைப்புகளை மீட்க இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து தற்காலிகப் பாலங்களை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.
திபெத்-நேபாளம் எல்லையில் கடந்த ஆக. 26ல் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவை விளைவித்தது. கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. இதுவரை 1,355 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் 589 போ் உள்பட மாயமான சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதுவரை மொத்தம் 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் மத்திய நேபாளம் முழுவதும் வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, மேலும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன. இதனால் நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடமும் தற்காலிகப் பாலங்களை நேபாள அரசு கோரியுள்ளது, அந்நாடுகளும் சாதகமாகப் பதிலளித்துள்ளன.
முஸ்டாங்கில் உள்ள கோரலா எல்லைக் கடப்பிற்குச் சீனா ஏற்கெனவே இரண்டு 100 மீட்டர் நீளமுள்ள பெய்லி பாலங்களை அனுப்பியுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்களுக்கான சேதத்தின் மதிப்பு நேபாள ரூபாயில் 30 பில்லியன் என சாலைகள் துறை மதிப்பிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் புனரமைப்புப் பணிகளுக்கு சுமார் 50 பில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
ரசுவா மற்றும் சித்வன் இடையே இருந்த 41 மோட்டர் வாகனங்கள் செல்லக்கூடிய பாலங்களை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், நான்கு பாலங்கள் பகுதியளவு சேதமடைந்தன. அந்த வழித்தடத்தில் உள்ள 63 பாலங்களில் 18 மட்டுமே சேதமடையாமல் உள்ளன.
ரசுவாவில் ஏற்பட்ட பேரழிவில் நுவாகோட்டுடனான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஃபுர்கே கோலாவில் உள்ள கான்கிரீட் பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் தாடிங் மாவட்டத் தலைமையகமான தாடிங்பேசிக்கும் பிருத்வி நெடுஞ்சாலைக்கும் இடையிலான நேரடி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், நுவாகோட்டில் உள்ள தேவிகாட்டில் நேபாள ராணுவம் தனியாக ஒரு அக்ரோ பாலத்தை அமைத்து வருகின்றது. பெய்லி பாலங்கள் கையிருப்பில் இருந்தாலும், அவற்றைச் சேதமடைந்த இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான சாலை வசதி இல்லாமல் உள்ளது.
வெள்ளத்தால் சேதமடைந்த பாதைகளைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பெய்லி பாலங்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதம் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் சவால்களை அதிகரித்துள்ளது. மேலும், வெள்ள நீரில் மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதிலும் அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.