தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவத்தால் ஷாக் ; இலட்ச கணக்கில் பறிபோன பணம்
ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
களுத்துறை, மஹீனட்டியங்கல, சவுசிறிபுர பகுதியைச் சேர்ந்த தமிழ் குடும்ப பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீவிர விசாரணை
தனிப்பட்ட தேவைக்காக கடந்த 05ஆம் திகதி களுத்துறை இலங்கை வங்கியின் உயர் தரக் கிளைக்கு சென்று ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றதாகவும், அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது அட்டையையும் இரகசிய இலக்கத்தையும் வழங்கியதாகவும் அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தப் பெண்ணாலும் பணம் எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்த ஆண் ஒருவர் உதவ முன்வந்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 07ஆம் திகதி வங்கிக்குச் சென்று தனது கணக்கை பரிசோதித்தபோது,நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.6,13,920 பணம் தனது கணக்கிலிருந்து பெறப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பரிசோதித்தபோது, தன்னிடம் இருந்த வங்கி அட்டை தனது கையொப்பத்துடன் கூடிய அட்டை அல்ல என்பது தெரியவந்ததாகவும், முன்னதாக உதவ முன்வந்த நபரே தனது வங்கி அட்டையை மாற்றிச் சென்றிருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.