;
Athirady Tamil News

உக்ரைன் துறைமுகத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!

0

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் 4 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இந்தியர்களில் 2 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இருவரின் நிலை தொடர்பான தகவலுக்குக் காத்திருப்பதாக உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று தெரிவித்தது.

ரஷியா-உக்ரைன் மோதல் தொடங்கிய 2022 ஆம் ஆண்டு முதலே, கருங்கடல் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஒடெசா துறைமுகத்தில், ’எம்வி ஏஜிஎன் ராக்னர்’ என்ற கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 4 இந்தியர்களில் 2 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், மேலும் 2 பேர் பற்றிய தகவல்களுக்காகக் காத்திருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.அங்குள்ள சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

4 இந்தியர்களின் விவரங்களும், தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும், அந்தச் சம்பவம் நடைபெற்ற சூழல் பற்றியும் எந்த உடனடித் தகவல்களும் வெளியாகவில்லை.

பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு உக்ரைனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை இந்தியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேபோல, அந்தப் பிராந்தியத்தில் உள்ள கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.