காங்கேசன்துறைக்கு பயணித்த ரயில் இடை நடுவில் கோளாறு; அடைத்து அள்ளிச்சென்ற யாழ்தேவி
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு ரயில், காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று பௌர்ணமி தினம் என்பதால், ரயிலின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, பின்னால் வந்த யாழ்தேவி விரைவு ரயிலில் காங்கேசன்துறை ரயிலின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.
இரு ரயில்களின் பயணிகளும் ஒரே ரயிலில்…
இதனால், இரு ரயில்களின் பயணிகளும் ஒரே ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட ரயில் வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று ரயில் சேவை இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.