;
Athirady Tamil News

உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்

0

எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்போது, அவர் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உலகச் சந்தை விலைகள் இறக்குமதிச் செலவுகளைப் பாதிப்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம்
இந்த ஆய்வுக்குப் பிறகு, அரசாங்கம் முன்னர் வழங்கிப் பின்னர் நிறுத்திவைத்த 15 பில்லியன் ரூபாய் மானியத்தை மீண்டும் கோரவோ அல்லது ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்ய எரிபொருள் விலை திருத்தம் போன்ற மாற்று வழிகளைக் கையாளவோ அமைச்சு முனையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக ஜூன் மாதத்தில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்ததாகவும், இந்த மாதம் விலைகள் சரிசெய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விலை உயர்வு
இதேவேளை, மத்திய கிழக்கு போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்தை விட எரிபொருள் விலைகள் 48 வீதம் உயர்ந்துள்ளதாகவும், தற்போது டீசல் விலைகள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

காப்பீட்டுக் கட்டணங்களும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் பெறப்பட்டாலும், இந்த விலை உயர்வு கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.