ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
சம்பவ பின்னணி:
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரைச் சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர். குறித்த சந்தேகநபர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் பிரகலதன், போதைப்பொருள் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை (B-Report) மூலம் உண்மைகளைத் தெரிவிக்காமல், முறையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) மூலமாக மட்டுமே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாகச் சந்தேகநபரிடம் ரூ. 20,000 இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இத்தொகையைச் செலுத்தச் சந்தேகநபர் சம்மதித்ததுடன், ஆகஸ்ட் 17 ஆம் திகதி பணத்தை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வலைவிரித்துப் பிடித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு:
பணத்தைப் பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதன் பெரியநிலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகப் பணி நிமித்தம் சென்றிருந்தார். இதனால், அவரது அறிவுறுத்தலின் பேரில் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுஹார் அனுப்பப்பட்டார்.
அப்போது அங்குத் தயாராக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பணத்தைப் பெற்றுக் கொண்ட கொன்ஸ்டபிளைக் கையும்களவுமாகக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதனும் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையை பொறுப்பேற்ற இவ்விரு அதிகாரிகளும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

