;
Athirady Tamil News

கின்னஸ் உலக சாதனையை வியக்க வைத்த கைபேசி சோதனை!

0

கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திரமான சாதனை சுவீடன் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் இருந்து சுமார் 30 ஆயிரத்து 607 மீற்றர் உயரத்தில் இருந்து, கைபேசி உறைக்குள் வைக்கப்பட்ட கைபேசியொன்று கீழே வீசப்பட்டுள்ளது.

இவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் அந்தக் கைபேசி எந்தச் சேதமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

‘ரைனோஷீல்ட்’ மற்றும் ‘சென்ட் இன் டூ ஸ்பேஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சுவீடன் நாட்டின் கிருனா பகுதியில் அமைந்துள்ள விண்வெளி மையத்துக்கு மேலாகப் பலூன் மூலம் இந்தச் சோதனையை செய்துள்ளன.

விமானங்கள் பறக்கும் உயரத்தை விடவும், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமான உயரத்திலிருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சிற்றூந்துகளில் உள்ள ஏர்பேக்குகள் மற்றும் விளையாட்டு பாதணிகளில் பயன்படுத்தப்படும் காற்றுமெத்தைகளில் இருந்து யோசனை பெற்று, அதிர்வுகளைத் தாங்கும் வகையில் இந்த விசேட கைபேசி உறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறுசுழற்சி செய்யக்கூடிய இந்தப் பொருளின் தரத்தை நிரூபிக்கவே இந்தச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனையின் விதிகள்படி, பரசூட் எதையும் பயன்படுத்தக் கூடாது என்பதால் கைபேசி உறை நேரடியாகத் தரையில் மோதியது.

எவ்வாறாயினும், கீழே விழுந்த கைபேசியைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினருக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஆகியுள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத இதுபோன்ற பொருள்கள் அதிக நீடித்து உழைக்கும் என்பதை உலகிற்கு உணர்த்துவதே இந்தச் சாதனையின் நோக்கம் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.