;
Athirady Tamil News

எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளின் சங்கம் கேள்வி

0

எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளின் சங்கம் கேள்வி

தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லக் கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய வேண்டும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்கள் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டேர் தினம் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த 3,478 நாட்களாக, எமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடுவதை கைவிடாமல் வவுனியாவில் வீதியில் நின்று போராடி வருகிறோம்.

இன்று, பிரித்தானிய பிரதமரிடமும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடமும் நாம் நேரடியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.

இலங்கையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினையில் பிரித்தானியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, காலனித்துவ நீக்கம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறையாண்மை மீட்பு தொடர்பாக சர்வதேச சட்ட வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியே பின்னர் சுதந்திர சிலோன் பெற்றுக்கொண்ட மையப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. 1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்த போது, ஒரே மையப்படுத்தப்பட்ட அரசைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு தொடர்ந்தது.

அந்த அரசியலமைப்பு ஏற்பாடு தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசியல் எதிர்காலத்திற்கு நிலையான தீர்வை வழங்கத் தவறிவிட்டது. அதன் விளைவுகளை தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர்.

பாகுபாடான அரச கொள்கைகள், இன வன்முறைகள், இடம்பெயர்வுகள், நில இழப்புகள், இராணுவமயமாக்கல், போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றை தமிழர்கள் எதிர் கொண்டுள்ளனர். இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் காத்திருக்கின்றன.

அரசாங்கங்கள் மாறியுள்ளன. ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதில் இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளின் முன்னைய தினத்தில், பிரித்தானியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் நாம் கேட்கிறோம். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

சிலோனை ஒன்றிணைத்த காலனித்துவ நிர்வாக நடைமுறையிலும், பின்னர் அதன் காலனித்துவ நீக்கத்திலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும் சட்ட ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய வேண்டும்.

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரும் முயற்சிக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள், அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கவில்லை.

எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது, அமைதியான மற்றும் ஜனநாயக நடைமுறையின் மூலம் சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உள்ளடக்கி, ஒரு சர்வதேச அரசியல் தீர்வின் பகுதியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தக் கேள்வியை சர்வதேச சட்டத்தின் முன் கொண்டுசெல்ல பிரித்தானியா உதவ வேண்டும் என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.