அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
தேரருக்கு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை
சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் தேரருக்கு எதிராக வேறு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்குகளில் அவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.