;
Athirady Tamil News

20 ஆண்டுகளாக ஒரே எண்… லாட்டரி குலுக்கலில் 3 பம்பர் பரிசு வென்ற பெண்

0

வாஷிங்டன்,

அதிர்ஷ்டம் எப்போது, எப்படி கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார். கடந்த 20 வருடங்களாக ஒரே எண்களைப் பயன்படுத்தி லாட்டரி சீட்டு வாங்கி வந்த பெண் ஒருவருக்கு, ஒரே குலுக்கலில் 3 பம்பர் பரிசு கிடைத்துள்ளது உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி விளையாட்டு
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி விளையாடி வருகிறார். இவர் எப்போதும் தனது குடும்பத்தினரின் பிறந்த எண்கள் மற்றும் ராசி எண்களை மட்டுமே (5, 6, 8, 12, 30) தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.

3 லாட்டரி சீட்டுகள்
நேற்று (புதன்கிழமை), மேரிலாந்து லாட்டரியின் ‘போனஸ் மேட்ச் 5’ என்ற விளையாட்டிற்காக அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். வழக்கமாக ஒரு சீட்டு மட்டுமே வாங்கும் அவர், அன்று ஏனோ தெரியவில்லை, அதே எண்களைக் கொண்டு மொத்தம் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

ஒரே நாளில் கொட்டிய ஜாக்பாட்
லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியான போது, அவர் தேர்ந்தெடுத்த அதே எண்களுக்கு முதல் பரிசு விழுந்திருந்தது. அவர் ஒரே எண்களில் 3 சீட்டுகளை வாங்கியிருந்ததால், 3 சீட்டுகளுக்குமே தலா 50,000 டாலர்கள் வீதம் மொத்தம் 1,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.42 கோடி) பம்பர் பரிசு கிடைத்துள்ளது.

நம்பிக்கை வீண்போகவில்லை
லாட்டரி அலுவலகத்திற்குச் சென்று தனது பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண், “கடந்த 20 வருடங்களாக நான் இதே எண்களைத் தான் பயன்படுத்தி வருகிறேன். என் கணவர் என்னிடம் எண்களை மாற்றிப் பார்க்க சொன்னார், ஆனால் என் நம்பிக்கையை நான் கைவிடவில்லை.

இந்த தொகையை எனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், வீட்டைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தப் போகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 20 வருட நம்பிக்கை வீண் போகாமல், ஒரே குலுக்கலில் 3 பரிசு கிடைத்த இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.