;
Athirady Tamil News

ஏமன்: ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் தாக்குதல் – 23 பேர் பலி

0

சனா,

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

தீவிரமடையும் மோதல்
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தியது. இதனால், ஹவுதிக்களுக்கும், சவுதிக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது.

23 பேர் பலி
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள அல் ஜாவ்ப் மாகாணம் ஹஸ்மா நகரில் உள்ள சிறைச்சாலை மீது நேற்று முன் தினம் அரசுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியாவுடன் இணைந்து ஏமன் அரசுப்படையினர் நடத்திய இந்த தாக்குதலில் சிறைச்சாலையில் இருந்த 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் மாயமாகியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சவுதி அரேபியா மீது நேற்று முன் தினம் இரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சவுதியில் 73 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.