;
Athirady Tamil News

இத்தாலி விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை

0

ரோம்,

இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் சோதனை

இத்தாலியின் வடக்கு நகரமான டுரின் பகுதியில் புகழ்பெற்ற காசெல்லே விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கோடைகாலக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, இத்தாலிய நிதி போலீசாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்திறங்கிய இத்தாலிய பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

துணிகளுக்கு இடையே பதுக்கல்

அப்போது, ராட்சத முதலையின் காய்ந்த தலை ஒன்று சாதாரண பரிசு காகிதத்தால் சுற்றப்பட்டு, சூட்கேசுக்குள் இருந்த துணிகளுக்கு நடுவே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், விமான நிலைய பாதுகாப்பு வளையங்கள் மற்றும் ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

சுற்றுலா பயணிகளின் அறியாமை

வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கூற்றுப்படி, அமெரிக்காவின் புளோரிடா போன்ற பகுதிகளில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இது போன்ற காய்ந்த முதலைத் தலைகள் பொதுவாக விற்கப்படுகின்றன. பல சுற்றுலா பயணிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் தெரியாமல், இவற்றைத் தங்களது சொந்த நாடுகளுக்கு நினைவுப் பரிசாக வாங்கி சென்று பெரும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.

சர்வதேச சட்ட விதிமுறைகள் -அபராதம்

முதலைகள் அனைத்தும் அழியும் ஆபத்தில் உள்ள மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்கு இனங்களின் சர்வதேச வாஷிங்டன் ஒப்பந்தத்தின் கீழ் வருகின்றன. இதனால், உரிய சர்வதேச உரிமம் அல்லது சான்றிதழ்கள் இன்றி இவற்றின் பாகங்களைக் கொண்டு செல்வது கடுமையான குற்றமாகும்.

தற்போது அந்த பயணியிடமிருந்து முதலைத் தலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த பயணிக்கு €20,000 முதல் €200,000 வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 லட்சம் முதல் ரூ1.8 கோடி வரை) அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.